ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

இந்த வாரம்: சில பரிசுகளும் சில விருதுகளும்.





      

சென்னையில் நடந்த இரு வேறு விழாக்களில் சில          விருதுகளும் சில பரிசுகளும்  அறிவிக்கப்பட்டது.



 எம்.ஏ. சிதம்பரம் அறக்கொடை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை அறக்கொடை அறிவித்துள்ளது.
         
டாக்டர் எஸ்.வி. சண்முகம்
  

 டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது: தமிழ் இலக்கியம் மற்றும் மொழி பங்களிப்பில் சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களுக்கான டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது தமிழறிஞர் டாக்டர் எஸ்.வி. சண்முகத்துக்கு வழங்கப்பட உள்ளது.

 டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது: நுண்கலைகளான சித்திரம், சிற்பம், இசை, நாடகம், நாட்டியம், படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது தமிழ் கவிதைத் துறையில் சிறந்து விளங்கும் கவிஞர் வாலிக்கு வழங்கப்பட உள்ளது.
 
எம்.பி. ராமச்சந்திரன்
    

 டாக்டர் ஏ.சி. முத்தையா விருது: சிறந்த முதல் தலைமுறை தொழில் முனைவோராக சிறந்து விளங்கும் சாதனையாளருக்கான டாக்டர் ஏ.சி. முத்தையா விருது தொழிலதிபர் எம்.பி. ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது.

 இந்த விருதுகள் டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரின் 93-வது பிறந்த நாளான அக்டோபர் 12-ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழங்கப்படும். விருது பெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி அனந்தன், கௌதம நீலாம்பரனுக்கு இலக்கியப் பரிசு
குமரி அனந்தன்                                                                                                                       
கௌதம நீலாம்பரன்
     
 

 குமரிஅனந்தன், கௌதம நீலாம்பரன் ஆகியோருக்கு 2011-ம் ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

"தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் "மூத்த தமிழறிஞர்' விருது, இலக்கியப் பரிசு ஆகியவற்றை தினத்தந்தி வழங்கி வருகிறது.

வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட மூத்த தமிழறிஞர் விருது இந்த ஆண்டு குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட உள்ளது.

புதன், செப்டம்பர் 21, 2011

அமெரிக்காவை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்குத் தடை.



ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியூயா‌ர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அ‌திகா‌ரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.




நியூயா‌ர்‌க்கிற்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க்குற்றச்சா‌ற்றுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே சிறிலங்கா அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்களுக்கு நியூயோர்க்கில் மட்டுமே இராஜதந்திர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தனது உறவினர்களை சந்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.



அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியூயா‌ர்‌க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
 



அதே நேரத்தில் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. திருப்பதியில் பூரண கும்பம் வைக்கப்படுகிறது...? இந்தியா போன்று அமெரிக்காவில் ராஜபக்சே சகஜமாக நடைபோட்டால் அவர் பிணமாகத்தான் இலங்கை திரும்பமுடியும் என்பதை உணர்ந்தே அமெரிக்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது, என்பதை நம்மால் உணரமுடிகிறது.
.

திங்கள், செப்டம்பர் 12, 2011

78ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தினமணி.





தினமணி  பற்றி சில சுவராசியத் துளிகள்.....
1932இல் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 13ஆவது நினைவு நாளன்று, அதன் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களால் தினமணி தொடங்கப்பட்டது.  பின்னர் திரு.ராம்நாத் கோயங்கா அவர்களால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டு,  நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளோடு உயர்ந்து நிற்கிறது தினமணி.

  • தொடங்கிய நாள் முதல் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அதனாலயே அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து சாம்பாதித்துக் கொண்டு வருகிறது. (பணம் காசு சம்பாதிப்பது குறைவுதான். )
  • நெருக்கடி நிலையின்போது அதிகம் பாதிக்கப்பட்டது தி இந்தியன் எஃஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள்தான். 
  • 2007வரை  சென்னை கிளப் ஹவுஸ் சாலையில் இயங்கி வந்த தினமணி,  தனது ஜாகையை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு மாற்றிக்கொண்டது.
  • இடையில் சிறிது தொய்வை சந்தித்த தினமணி, ஆசிரியர் வைத்தியநாதனின் வருகைக்குப் பின்னர் சற்று தெம்பாக  நடைபோட்டு வருகிறது.
  • தமிழகத்தில் மக்கள் மனமாற்றதிற்கு முக்கிய காரணியாக தினமணி திகழ்ந்துவருகிறது.
  • தினமணி தனது முதல் பக்கத்தில் அரை பக்கத்திற்கு மேல் விளம்பரம் பிரசுரிக்கமாட்டாது.  ஏனென்றால் 'அது  வாசகர்களின் பகுதி, அதை முழுமையாக ஆக்ரமிக்க நமக்கு அதிகாரம் இல்லை' என்று பதில் வரும்.   இவ்வேளையில் தினமலர் , தினத்தந்தி மற்றும் தினகரனை நினைத்துப் பாருங்கள்.  தினமலரில் முதல் பக்கத்தில் வெறும் 'ஷாக்' என்றுதான் இருக்கும். மீதி இடம் முழுவதும் விளம்பரம் நிறைந்திருக்கும். ஷாக் யாருக்கு....? அதன் வாசகர்களுக்கா....?
  • தமிழகத்தின் மிகப்பழமையான நாளிதழ் தினமணி.
  • டி.எஸ் சொக்கலிங்கம், ஏ.என் சிவராமன், ஆர்.எம்.டி. சம்பந்தம் போன்ற திறன்படைத்தோர் ஆசிரியர்களாக பணி புரிந்துள்ளனர்.
  • பதிப்பக விளம்பரங்கள் தினமணியில்தான் முதலில் வரும். எப்படி சினிமா எடுப்பவர்கள் முதலில் 'தினத்தந்தியில் விளம்பரம் செய்வார்களோ, அதேபோல் புத்தக விற்பனை விளம்பரம் முதலில் தினமணிக்குதான் வரும்.
  • பதிப்பகங்களின் பாதுகாவலன் தினமணி.  சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்  தினமணிதான் முக்கிய ஸ்பான்சர்.
  • மதராஸ் ராஜதானியிலிருந்து தமிழ்நாடு பிரிந்த 50தாவது வருடத்தை 'தங்கத் தமிழகம்' என்ற பெயரில் 100 பக்க (முழு பக்கம்) ஆளவில் சிறப்பிதழாக  கொண்டுவந்து சாதனை செய்தது தினமணி.  தமிழகத்தின் தகவல் களஞ்சியாமாகத்  தங்கத் தமிழகம் இன்றும் திகழ்கிறது.  தினமணிக்கு  நிகர்  தினமணிதான் என்பதை நிருபித்தது.
  • தங்கத் தமிழகம் சிறப்பாக வெளிவர  அன்றைய தினமணி கதிர் ஆசிரியர் சிவக்குமாரின் பங்கு போற்றுதலுக்குரியது. (தங்கத் தமிழகம் பெயர் உபயம்... அடியேன் என்பதையும் இத் தருணத்தில் சிரம் தாழ்த்திக் கூறிகொள்கிறேன்)
  • மாணவர் மலர், மருத்துவ மலர், தீபாவளி மலர் மற்றும் இசை மலர் என்று வருடம் தோறும் என்னற்ற சிறப்பிதழ்களை கொண்டு வருகிறது.
  • தினமணி வெளியீட்ட  'அண்ணா நூற்றாண்டு மலர்', 'செம்மொழி கோவை' சிறப்பிதழ் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
  • கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டை ஒட்டி எல்லா  நாட்களும் நான்கு பக்கத்தில் சிறப்பிதழை வெளியிட்டு தமிழுக்கு சிறப்பு சேர்த்தது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி தினமணி மீது அவ்வப்போது கருத்து யுத்தம் நடத்தினாலும்,  தினந்தோறும் தினமணியை வாசிக்காமல் இருக்கமாட்டார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
  • தினமணி கருணாநிதியை வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும் அடுத்த நாள் அது முரசொலியில்  எதிரொலிக்கும்.
  • தமிழ் நாளிதழ்களில் இன்றும் தலையங்கம் வருவது தினமணியில்தான்.
  • ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு அவர்களது செய்திகளை தாய் உள்ளத்துடன் வெளியிடும் தினமணி.
  • இலங்கையில் நடைபெற்ற  போரில் பிரபாகரன் கொல்லப்பட்டபோது, தனது முதல் பக்கத்தில் 'பிரபாகரன் வீர மரணம்'  என்று வெளியிட்டு அந்த மாவீரனுக்கு மரியாதை செய்தது தினமணி.
  • இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டபோது தினமணி தீட்டிய தலையங்கம்,  உலகத் தமிழர்களால் பெரிதும் பேசப்பட்ட, . முக்கியமான தலையங்கமாக இன்றும் கருதப்படுகிறது.
  • மற்ற பத்திரிகைகளில் கற்பழிப்பு, கள்ளக் காதல், கொலை போன்ற சம்பவங்கள் பெரிதுப்படுத்தபட்டு வரும்போது...அந்த செய்தி தினமணியில் ஒரு காலத்தில்தான் வரும்.  சில நேரங்களில் வராமலும் போகும்.
  • விபத்தில் இறந்தவர்கள் அல்லது கொலையுண்டவர்களின் புகைப்படங்களை அப்படியே வெளியிடாது தினமணி. மாறாக அவர்கள் உயிரோடு (live pixure) இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையே வெளியீடும்.
  • தமிழக நாளிதழ்களில் தினமணியை மட்டுமே அதிகம்பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
  • தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தினமணியையே அதிகம் தேர்வு செய்கின்றனர். .
  • அன்மையில்  புது தில்லியில் தனது 8வது பதிப்பை தொடங்கியது தினமணி.
  • இன்றும் சிலர் தினமணியை தனிப்பட்ட முறையில் சேமித்து பாதுகாத்து வருகின்றனர்.
  • இப்படி என்னற்ற தகுதிகளை கொண்டது தினமணி நாளிதழ். இந்த வரலாற்றுதினத்தில்  தினமணியை வாழ்த்தி வணங்குகிறது தமிழன்வீதி.

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

திருவாலங்காட்டில் அம்மனுக்கு வளைக்காப்பு!





திருவாலங்காடு அருள்மிகு வடராண்யேசுவரர் சுவாமி திருக்கோயில்



எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆதங்கம் உண்டு. கூகுள் தேடு பொறியில்  எங்கள் ஊர் திருவாலங்காட்டைப் பற்றி தேடினால், சென்னைக்கு அருகில்  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  திருவாலங்காட்டைத்தான் காட்டும். நானும் தேடு பொறியில் விதவிதமான சொற்களைப் போட்டு தேடினாலும் அந்த திருவாலங்காட்டைப் பற்றிதான் நிறைய தகவல்கள் கிடைக்கும். எங்கள் ஊரை பற்றி ஒன்றும் இருக்காது.  முடிவில் ஏமாற்றமே மிஞ்சும்.

சரி.... இதை நாம்தான் சரிசெய்யவேண்டும் என்று முடிவு செய்து,  நான் எடுத்த படங்களையும் ஊரைப்பற்றியும்  எனக்கு தெரிந்தவரை பதிவேற்றிவுள்ளேன்

     ****                     ****                          ****                    ****                    ****                   ****


காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்தான் திருவாலங்காடு.   மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் குத்தாலம் மற்றும்  மாதிரிமங்கலம் தாண்டினால்   ஊர் வந்துவிடும்.   கும்பகோணத்திலிருந்து வரும்போது திருபுவனம், திருவிடைமருதூர், கோவிந்தபுரம்,  ஆடுதுறை, நரசிங்கன்பேட்டையை தாண்டவேண்டும்.





 



திருவாவடுதுறை செல்ல இங்கு இறங்க வேண்டும்.

பிரசித்திப்பெற்ற திருவாவடுதுறை மடத்திற்கு செல்ல எங்கள் ஊரில்தான் இறங்க வேண்டும். இங்கிருந்து 3 கிமீ இருக்கிறது திருவாவடுதுறை. நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் வாழ்ந்த ஊர் திருவாவடுதுறை. தோடியில் அடி பின்னியடித்த அவரது தெய்வீக ராகம் இன்றும் திருவாவடுதுறை காற்றில் தவழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.  மடத்தின்  பிரமாண்டமான  மதில் சுவரும், பெரிய சிவன் கோயிலும், தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு இணையான நந்தியும்   பார்ப்பவரை பரவசப்படுத்தும். ஆண்டுக்கு ஒரு முறை இங்கு மடத்தார் பட்டினப்பிரவேசம் செய்து மக்களுக்கு காட்சித் தருவார்.  திருவாவடுதுறை அன்ன மடமாக போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



சோழ சாம்ராஜ்ஜியம்.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் மைய பகுதியில் எங்கள் ஊர் இருப்பது நாங்கள் பெற்ற பேரு என்றுதான் சொல்லவேண்டும். .  சேழ நாட்டிற்கே உள்ள பார்முலா இங்கும் இருக்கும்.  எல்லா பெரிய ஊர்களிலும் சோழர்களால் கட்டப்பட்ட  ஒரு பிரமாண்டமான சிவன் கோயில் இருக்கும். அதற்கென்று நிலபுலன்ங்கள் உண்டு.  எங்கள் ஊரிலும் மேற்கு பக்கம் பார்த்த சிவன் கோயில் இருக்கிறது.  வடராண்யேசுவரராக  இங்கு எழுந்தருளியுள்ளார்.


திரு+ஆலங்காடு = திருவாலங்காடு

முன்பு ஆல மரங்கள் நிறைந்திருந்ததால் திரு-ஆலங்காடு என்று அழைக்கபெற்று. பின்பு அதுவே மருவி திருவாலங்காடு என்றானது என்று சொல்லக் கேள்வி. நான் சிறு வயதாக இருந்த போது காவிரிக்கரையின் ஓரத்தில் நிறைய ஆல மரங்கள் நிறைந்திருந்தது. ஆலம் விழுதுகளைப்  பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடிய காலங்கள் உண்டு. அதை 'கோண' மதகு என்று அழைப்போம். 

கோயில் வரலாறு!

இங்கு இரு சிவ சன்னதிகள் உள்ளது. மூல ஸ்தானம் வட ஆரண்யேஸ்வரர். இன்னொரு சிவ சன்னதிக்கு பெயர் புத்ரகாமேஸ்வரர். அம்மன் பெயர் வண்டார்குழலி. இங்கு தலவிருச்சமாக ஆலமரம் போற்றப்படுகிறது. திருவாவடுதுறை ஆதினத்தை சார்ந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைஅவர்கள் 'திருத்துருத்தி புராணத்தில்'  இந்தக் கிராமத்தை பற்றியும் கோவிலைப் பற்றியும் குறிப்பு எழுதியுள்ளார்.

சோழர்கள் காலத்தில்  இக் கோயில் புகழ்பெற்று விளங்கியது எனலாம்.  மூன்றாம் குலோத்துங்கனால் இக் கோயில் புனரமைக்கபட்டு வடராண்யேசுவர சுவாமியை வணங்கினார் என்று கூறப்படுகிறது.  இக் கோயிலை முதலாம் குலோத்துங்கச் சோழன் கிபி1178-1218வாக்கில் கட்டினார். 
புத்திரகாமேசவர குளம்


திருவாவடுதுறை ஆதினத்தால் இக் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.  பரத முனிவரும் அவரது மனைவி சுபத்ராவும் குழந்தைவரம் வேண்டி சிவனை வேண்டிய போது...வானத்திலிருந்து ஒரு குரல்  'திருவாலங்காடு சென்று அங்கு உள்ள வடராண்யேசுவரரை தருசிக்கவும்' என்றது. அதன்படி திருவாலங்காடு வந்த அந்த தம்பதிகள், வடராண்யேசுவரரை தரிசித்து இங்கு உள்ள  குளத்தில் நீராடி.... 'புத்திரகாமேசவர யாகம்' செய்து, புத்திரபாக்கியம் பெற்றனர்.   புத்திரபாக்கியம் பெற சிறந்த தளமாககவும் இது விளங்குகிறது.  அதோடு மட்டுமல்லாமல் சிவனுக்கு சனி தோஷம் நிவர்த்தி செய்த தளமாகவும் இக் கோயில் அறியப்படுகிறது. 
'பாதாள நந்தி'


நந்தி மற்ற கோயில்கள் போலல்லாமல் தரைக்கு கீழே இருக்கும். அதனாலயே 'பாதாள நந்தி' என்று அழைக்கப்படுகிறது. இக் கோயிலில்  முருகன் தனது மனைவியருடன் காட்சித் தருகிறார்.  தெக்ஷனாமூர்த்தி மிக இளமையான கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு எமனுக்கு என்று  தனி சன்னிதியும் உண்டு.   கருவரைக்கு முன் ஊள்ள சந்தன பிள்ளையார் இரட்டை பிள்ளையாராக காட்சித் தருகிறார்.

அம்மனுக்கு வளைகாப்பு

ஒவ்வொரு வருடத்திலும் பங்குனி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு  அமாவாசை அன்றும்   புத்திரபாக்கியம் பெற புத்திரகாமேஸ்வர தீர்த்த  பூஜை செய்யப்படுகிறது. அதோடு இங்கு அம்மனுக்கு ஆடி மாதத்தில் 'வளைகாப்பு'செய்யப்படுகிறது.  புத்திரபாக்கியம் பெற விரும்புவோர் இந்த வளைகாப்பில் கலந்துக் கொண்டு அம்மனின் அருளைப் பெறுகின்றனர். 
உள் பிரகாரத்திலிருந்து ஒரு 'கிளிக்'





எப்படிச் செல்வது                                                      .


சென்னையிலிருந்து 260 கிமி. சென்னையிலிருந்து பேருந்து மார்க்கமாகவோ அல்லது புகைவண்டியிலோ வரலாம். மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் தங்கி சுற்றி உள்ள கோயில்களை தரிசிக்கலாம்.  திருவாலங்காடு வர இரயில் மார்க்கம் என்றால் அருகில் நரசிங்கன்பேட்டை அல்லது குத்தாலம் இரயில் நிலையத்தில்  இறங்கலாம்.
அருகில் உள்ள தளங்கள்:

திருமணஞ்ச்சேரி         : 13 கிமி (approx...)
கஞ்சனூர்                         :  5 கிமி
சூரியனார்கோயில்      :  7 கிமி
திருவாவடுதுறை        :  3 கிமி
மயிலாடுதுறை             :  15 கிமி
குமபகோணம்                : 21 கிமி
திருவிடைமருதூர்       :  15 கிமி
திருபுவனம்                     :  17 கிமி
----------------------------------------------------------------------------
படங்கள் மற்றும் கட்டுரை :  - தோழன் மபா. 

சனி, செப்டம்பர் 10, 2011

ஜெயலலிதாவின் தலையில் தட்டிய தினமணி.



முதாய நலனில் எப்போதும் அக்கரைக் கொண்டு, மக்கள் பக்கம் நின்று செய்திகளை வழங்கி வரும் தினமணி நாளிதழ், தனது இன்றைய (10/09/2011)  தலையங்கத்தின் மூலம் ஜெயலலிதாவிற்கு 'குட்டு' வைத்துள்ளது.
நேற்று முன்தினம் 8ம் தேதி  சட்டப் பேரவையில்  ஜெயலலிதா பேசும் போது...  "  கள்ளச்சாராயம் காய்ச்சி சம்பாதிக்கவேண்டும்  என்பதற்காக சமூகவிரோதிகள்தான் டாஸ்மாக்கை மூடவேண்டும்  என்கிறார்கள்.  டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று சொல்பவர்கள் சமூக விரோதிகள். டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்...." என்று வசைபாடினார்.  

டாஸ்மாக் வருவதற்கு நாம்தானே காரணம்  (படிக்க... குடிக்க கற்றுக் கொடுத்த 'கோ' மகள்) என்ற மனசாட்சியின்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.   இதை நாளிதழ்களில் படித்தவர்கள்  முகம் சுழிக்கத்தான் செய்தனர்.   முழு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லாமா...? இதை தட்டிக் கேட்க ஆளில்லையா என்று நாம் திகைத்து நிற்க....  இன்றைய  தலையங்கம்  'மகுடமல்ல, முள்கிரீடம்' என்ற தலையங்கம் மூலம் ஜெயலலிதாவிற்கு 'குட்டு' வைத்துள்ளது தினமணி நாளிதழ். 



'டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றால்,  எதற்கு ஆட்சி அதிகாரம், காவல்துறை' என்று கேள்வி எழுப்பி... சற்று காட்டமாகவே ஜெவை விளாசிவுள்ளது தினமணி.  

இனி தினமணி தலையங்கம்......

                                                  'மகுடமல்ல, முள்கிரீடம்'                                                   

மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடி வருவாய் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது நியாயமான கருத்து போலத் தோன்றும். மது விற்பனையை அரசு செய்யாமல் தனியார் எடுத்துக்கொண்டு செய்தால், இத்தனை லாபமும் தனியாருக்கு அல்லவா போகும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த மதுவைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பணம் எவ்வளவு, இந்த மதுவின் உற்பத்திச் செலவு எவ்வளவு என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்குமேயானால், தற்போது மது விற்பனையில் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடியைக் காட்டிலும் அதிகமான வருவாயைத் தனியார் மது தயாரிப்பு நிறுவனங்கள் லாபமாக அடைந்து வருகின்றன என்கிற கசப்பான உண்மை வெளிப்படும்.

அந்நிய மதுபானத் தொழிலில் வெறும் எரிசாராயத்தைத் தண்ணீரில் கலந்து விற்பதைத் தவிர, மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது. பல தருணங்களில் இந்த மது புளிப்பேறும் காலஅவகாசம்கூட இல்லாமல் அப்படியே பாட்டில்களில் அடைக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. அவ்வளவு தேவை இருக்கிறது. ஆகவே, மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் மேலதிகமாகவே கிடைக்கிறது என்பது நிச்சயம். தரக்கட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது, கலால் வரி கட்டாமல் திருட்டுத்தனமாக எவ்வளவு மது விற்பனையாகிறது என்பதெல்லாம் வெளியில் விவாதிக்கவேபடாத பிரச்னைகள்.

மதுவிலக்கை அமல்படுத்தினால் என்ன ஆகும் என்று பார்க்கலாம். தமிழக அரசுக்கு ரூ. 15,000 கோடி வருவாய் கிடைப்பது நின்றுபோகும். அதேபோல, மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்காது. இத்தனை வருமானமும் சமூகவிரோதிகளுக்குப் போகும் என்று சொன்னால், தமிழகத்தில் இப்போது விற்பனையாகும் அதே அளவுக்கு கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினால்தான் உண்டு. பிறகு எதற்கு காவல்துறை, கண்காணிப்பு? ஏன், ஒரு ஆட்சி, அரசாங்கம் எல்லாம்? லஞ்சத்தைக் கட்டுப்படுத்த அரசால் முடியாது என்று கூறி லஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதுபோல இருக்கிறது இந்த வாதம்.

மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இருக்கத்தான் செய்தனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர்களிடம் திருட்டுத்தனமாக சாராயம் குடித்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஊரிலும் சில நூறு பேர்தான். கள்ளச்சாராயம் குடிப்பது சமூக அவமானமாகக் கருதப்பட்டதால் 95 சதவிகித குடிமக்கள் குடிகார மக்களாக இல்லாமல் இருந்தனர்.

ஆனால், அரசு சொல்கிறது 32 மாவட்டங்களில் ரூ.66 லட்சத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தி மதுவின் தீமை குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவிருக்கிறோம். இதுதவிர, ஆயத் தீர்வை ஆணையருக்கு ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று! ஏற்கெனவே மாநிலத்தில் மதுஅடிமைகளின் புனர்வாழ்வு மையங்கள் 15 உள்ளன. இவற்றுடன் மேலும் 3 மையங்கள் திறக்கப்படும். புதிய மையத்துக்காகவும், பழைய மையங்களை மேம்படுத்தவும் ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சொல்கிறது தமிழக அரசு. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக இருக்கிறது.

ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். 1991-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, சாராயக்கடைகளை மூடி புண்ணியம் கட்டிக்கொண்டார். அதற்காக அவரைப் பாராட்டாத தாய்மார்களே கிடையாது. இப்போது அவர் ஏன் அதே மனத்திண்மையுடன் செயல்படாமல் இருக்கிறார் என்பதுதான் அவரிடமிருந்து நல்லாட்சியை எதிர்பார்ப்பவர்கள் எழுப்பும் கேள்வி.

"திமுக அரசின் இலவசத் திட்டங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான நிதி மதுவிற்பனையில்தான் கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட முடியாத நிலை' என்று காரணம் கூறக்கூடும். அதற்கு படிப்படியாக இலவசங்களைக் குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் வழியே தவிர, மது விற்பனையை அதிகரித்து இலவசங்களை வாரி வழங்குவது சரியான முடிவாக இருக்காது.

மதுக்கடைகளில் வேலை செய்யும் சுமார் 30,000 பேரும் ஏதோ ஓர் அரசியல்கட்சியுடன் இணைவு பெற்ற டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் அமைத்துள்ளனர். பணிநிரந்தரம் செய்யக் கோரி போராடுகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் அதே அரசியல் கட்சிகள் தங்கள் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்காகக் களத்தில் குதிக்கின்றன. அரசியல் கட்சிகளின் ஆஷாடபூதிதனத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

மது விற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் இலவசங்களை அள்ளிக் கொடுக்க முடிகிறது. 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது என்பதெல்லாம் நொண்டிச் சாக்குகள். மது விற்பனையால் மக்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம் சீர்குலைகிறது. உழைக்கும் திறன் குறைகிறது. அடுத்த தலைமுறையினர் சீரழிகிறார்கள். மாலை 5 மணிக்குப் பிறகு பெண்கள் தனியாகத் தெருவில் நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரக் குறைவான தெருவோரக் கடைகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம்தான் நிஜமான விளைவுகள்.

"முதலில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும் பார்களும் இருப்பதை பாதிக்குப் பாதியாகக் குறைப்பது அடுத்த 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நோக்கித் தமிழகத்தை இட்டுச் செல்வது மதுக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சுயதொழில் செய்ய வாய்ப்பளித்து அந்த இளைஞர்களுக்கு நல்லதொரு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது'. இப்படியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பு.

2003-04-ம் ஆண்டில் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,639 கோடி. 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965 கோடி.
   

இது நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் மணிமகுடமா, முள்கிரீடமா? என்ற கேள்வியோடு தனது தலையங்கத்தை முடித்துள்ளது தினமணி.

தினமணி போன்ற  பொறுப்புமிக்க பத்திரிகைகளால்தான் நாடும் வீடும் உறுப்படும். அவர்கள் தரும் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு நல்வழியில் நடந்தால் எல்லோருக்கும் நலமே....!

                                                                                                                                                   

வியாழன், செப்டம்பர் 08, 2011

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டி ஈழத்தமிழர்கள் பட்டினி போராட்டம்.




செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 12 ஈழத் தமிழர்கள், தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கவேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிவுள்ளனர்.  நெடுங்காலமாக இந்த சிறப்பு முகாம்களில் 41 ஈழத்தமிழர்கள் எந்தவித விசாரனையுமின்றி இவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
 
     


சிறப்பு முகாம்களுக்கும் சாதாரன முகாம்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.  சாதாரன முகாம் என்றால், நீங்கள் வழக்கமான வேலைகளை கவனிக்கலாம். வெளியே வேலைக்குச் செல்லலாம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். ஆனால், சிறப்பு முகாம் என்றால் அது ஒரு ஜெயில் வாழ்க்கை போன்றதுதான். இங்கு அடைத்துவைக்கபட்டுள்ள இவர்கள்,  வழக்கமான  முகாம் போன்று வெளியே நடமாட முடியாது.   எதுவாக இருந்தாலும் அரசின் அனுமதி பெற்றுதான் வெளியே செல்ல முடியும். 



இப்படி தொடர் இன்னல்களை அனுபவித்த வந்த இவர்கள், தங்களை இந்த சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டி,  கடந்த திங்கள் முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதை துவக்கி உள்ளனர்.   இது தொடர்பாக தங்களது கோரிக்கையை  தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊடகங்கள் என்று   அனுப்பியுள்ளனர்.

அதில் கூறியதாவது....! 
     

     ஐயா!
மேற்படி ஈழத்தமிழர்களாகிய நாம் செங்கற்பட்டு சிறப்புமுகாமில் மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். எமது குடும்பங்கள் எங்களைப்பிரிந்த நிலையில் ஈழத்தில் வாழமுடியாமல் இங்கு வந்து இங்கும் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வித வாழ்வாதாரமும் அற்ற நிலையில் பசி, பட்டினியால் வாடுகின்றனர்.

எங்களில் அனேகமானவர்கள் மீது தேவையற்ற பொய்யான வழக்குகள்
சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுபின்னர் கனம் நீதிபதி அவர்களின் ஆணைப்படி பிணையில் (ஜாமீன்) வெளியே வரும்போது சிறைவாயிலிலே வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில்  டைக்கப்பட்டுள்ளோம். சிலர் எவ்வித வழக்குகளுமில்லாமல் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்தமாக நாற்பத்தொரு(41) பேர் உள்ளோம்.

ஐயா!
இங்குள்ளவர்கள் யாரும் இந்திய இறையாண்மைக்கு எதிரான பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களென்று சொல்வதற்கில்லை.

 நாங்கள் பலதடவைகள் கேட்டு அகிம்சையாக போராட்டங்களை நடத்தியும் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை. எனவே நாம் காந்திய வழியில் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே எங்களதும் எங்களின் குடும்பங்களினதும் வாழ்க்கையினை கருத்தில் கொண்டு எம்மை விடுதலை செய்யும் வரை  எதிர்வரும் 05-09-2011 திங்கட்கிழமையிலிருந்து உண்ணாவிரத்ததினை மேற்கொள்ளவுள்ளோம் என்பதையும் அத்துடன் நாங்கள் மருத்துவச்சிகிச்சைக்கோ வேறு எதுவித முதலுதவிச்சிகிச்சைக்கோ எங்களை உட்படுத்திக்கொள்ள அனுமதிக்கமாட்டோம்.

ஒன்றில் விடுதலையாகவேண்டும் அல்லது மரணமே முடிவாகினாலும் அதற்கும் சித்தமாக இருக்கின்றோம் என்பதனையும் தங்களின் கருணை உள்ள கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

 நன்றி.
இங்கனம்
உண்மையுள்ள
செங்கற்பட்டு சிறப்புமுகாம்
உண்ணாவிரதிகள்.

05-09-2011 உண்ணாவிரதம் இருக்கும்
உண்ணாவிரதிகளின் பெயர் விபரம் கீழ்வருமாறு,

1. மோ.தேவாகரன்
2. ஏ.கே.சேக்பரித்
3. செ.நாராயணதாஸ்
4. S.அருள்குலசிங்கம் ரமேஸ்
5. கணேசலிங்கம்
6. சந்திரகாந்தன்
7. செ.கிருஷ்ணலிங்கம்
8. அ.செல்வராசா
9.ரா.செந்தூரன்
10.யோ.சிறிஜெயன்
11.பா.தர்மராசா
12.ச.கிரிதரன்

சொந்த நாட்டில் துயரம் என்றுதான், தங்களது தொப்புல் கொடி உறவான தமிழகத்திற்கு வந்துள்ளனர். ஆனால், இங்கு வந்தும்,  மத்திய அரசின் தவறான கொள்கையால் சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்துவைத்து சித்ரவதை செய்கின்றனர். இங்கு அடைத்து வைத்துள்ளவர்களால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்ற போர்வையில் மத்திய  அரசு  இந்த தவறான முடிவை தொடர்ந்து செய்துவருகிறது.   சொந்த மண்னை பிரிந்து, சொந்தங்களை பிரிந்து, சொத்துகளை இழந்து துயரத்தின் விளிம்பில் இருக்கும் இவர்களை சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது 'தமிழன் வீதி'


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...