ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

வாய் இல்லா ஜீவனா ? இல்லை பேச்சில்லா ஜீவனா?

சனிக்கிழமை என்பதால் அரை நாள்தான் அலுவலகம்.
சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் (வீட்டில்தாங்க..) என்றுப் பார்த்தால், எனது இரண்டு வயது மகன் 'நை'யென்று அழுதுகொண்டு இருந்தான். எனது மகளும் "வெளியே எங்காவது போகலாம் ப்பா" என்றாள்.

எனது இருசக்கர வாகனத்தில் இருவரையும் அழைத்துக் கொண்டு, என் வீட்டின் அருகில் உள்ள 'அன்னனுர்' இரயில் நிலையத்திற்கு சென்றேன். அன்னனுர் இரயில் நிலையம், சென்னை ஆவடி இரயில் மார்க்கத்தில் திருமுல்லைவாயிலுக்கும் ஆவடிக்கும் இடையில் இருக்கிறது. அதிகம் அறியப்படாத இரயில் நிலையம் அது!. பரந்து விரிந்து, அதிகம் கூட்டம் இல்லாமல் பார்க்கவே அழகாக இருக்கும். சென்னை தமிழில் சொல்வதென்றால் 'ஜில்லோன்னு' இருக்கும்.

2006 வாக்கில் நான் இங்கு வீடு வாங்கிக்கொண்டு வந்தேன். அப்போதுதான் இங்கு ஒரு இரயில் நிலையம் இருப்பதையே பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது. அருகிலேயே இரயில் பணிமனையும் இருக்கிறது.

வேகமாக வளர்ந்துவரும் புறநகர் பகுதி இது. திருமுல்லைவாயில், அன்னனுர் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறன. சென்னையில் வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் இங்கு முயற்சி செய்யலாம். விலையும் சற்று குறைவுதான்.

போகட்டும் விஷயத்திற்கு வருவோம்...

பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

அருகில் மாடுகள் மேய்ந்துக் கொண்டு இருந்தது, என்னைப் பார்த்து என் மகள் கேட்டாள்...

" அப்பா, இங்க மாடு 'அம்மா'ன்னு கத்துது. லண்டன்ல எப்படி கத்தும் மதர்ன்னு கத்துமா? " என்றாள்.

"இல்லம்மா மாடு எந்த மொழியில கத்தினாலும் 'அம்மா'ன்னுதான் கத்தும். மதர்ன்னெல்லாம் கத்தாது" என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக வந்தவள்.

மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள்.

'ஏம்பா... எதுக்கு நாம மாட்டெல்லாம் 'வாயில்லா ஜீவன்'னு சொல்றோம்?. அதுக்குதான் வாய் இருக்கே. அப்படின்னா அதுங்கள நாம 'பேச்சில்லா ஜீவன்னு'தானே சொல்லனும் என்றாள்".

ஒன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகளிடமிருந்து இந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர்ப்பார்கவில்லை.

பொதுவாக மிருகங்களை நாம் வாயில்லா ஜீவன்னுதான் சொல்கிறோம். அதாவது; எதைவைத்து அப்படிச் சொல்கிறோம், அதுங்களால பேசமுடியாது என்பதால்தான். மற்றப்படி கத்தும், உங்களை உணர்ந்துக் கொள்ளும், தழை, வைக்கோல் உண்ணும், தண்ணி குடிக்கும். பேச்சைத் தவிர இன்னபிற வேளைகளையும் செய்யும். அப்படி இருக்க அதை நாம் வாயில்லா ஜீவன்னு சொல்றதைவிட 'பேச்சில்லா ஜீவன்னு' சொல்றதுதானே சரி?

தெரிந்தவர்கள் கொஞ்சம் தெளிவுப்படுதுங்களேன்?

வியாழன், பிப்ரவரி 25, 2010

ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


கலைவாணி.
ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


சென்னை பாரீஸ் கார்னரில் ஹை கோர்ட் ஓரம், தி நகரில் நல்லி 100 அருகில், போத்தீஸ் எதிர் ரோடு என்று பாலியல் தொழிலாளிகளை சில இடங்களில் பார்த்ததுண்டு. சிவப்பு ,கருப்பு, மஞ்சள் என்று விதவிதமான சேலைகளில், அதிகப்படியான ஒப்பனைகளில் நின்று கொண்டு இருப்பார்கள். நான் சொல்வது 1996 அல்லது 98 என்று நினைக்கிறேன். அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விடும் இவர்கள் 'அப்படிப்பட்ட பெண்கள் (?)' என்று.

அவர்களை பார்த்தால் அப்படி ஒன்றும் வளமான வாழ்க்கை வாழ்பவர்களாகத் தெரியாது. வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டுபவர்களாத்தான் தெரியும். அங்கே நிற்பவர்கள் யாரும் தானாக தேடி இந்த தொழிலுக்கு வந்திருக்கமாட்டார்கள். சூழ்நிலை கைதிகளாய் வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்குண்டு, கரை ஒதுங்கி நிற்பவர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

அப்படி ஒரு பாலியல் தொழிலாளியின் கதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிழக்கு பதிப்பத்தின் தயாரிப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.

கலைவாணி. ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


ஒரு பெண் எங்கு தவறு செய்கிறாள், எப்படி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகிறாள்? என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது.


இக் கதையில் (கதையல்ல நிஜம்!) வரும் கலைவாணியும் அப்படித்தான். எங்கெல்லாம் பிறர் மனம் கோணக் கூடாது என்று நினைக்கின்றாறோ அங்கெல்லாம் அவர் பெண்டாளப்படுகிறார். குடுப்பச் சூழலும் அவர் எடுக்கும் முடிவுகளும் அவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்று கதையின் போக்கோடு சென்று நாமும் தெரிந்துக் கொள்கிறோம்.

இப் புத்தகத்தை படிக்கப் படிக்க சென்னையின் விகாரமான மறுப்பக்கம் புரிகிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஒன்றுமே அறியாத கிராமத்து சிறுமியாக இருக்கும் கலைவாணி எப்படி ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக உருமாறுகிறார் என்பதை மிக யதார்த்த நடையில் கூறுகிறார் ஜோதி நரசிம்மன்.

'மகனின் மருத்துவ செலவுக்கு பணம் தருகிறேன் வா..'என்று, ஒருவன் பாரிமுணை அந்தோணியார் கோவிலுக்கு அருகில் இருந்து அவளை கூட்டிக் கொண்டு 'திருவேற்காடு' செல்கிறான். அங்கு அவரோடு பாலியல் தொடர்பு கொண்டுவிட்டு "இதோ... வீட்டில் போய் பணம் எடுத்து வருகிறேன் நீ பஸ் ஸடாண்டில் வைட் பண்ணு" என்று கூறிவிட்டு கம்பி நீட்டி விடுகிறான்.

பசிமயக்கம் காதை அடைக்க இரவு வரை காத்திருக்கும் கலைவாணியிடம் 3 ரூபாய் மட்டுமே இருக்கிறது. இரவு 9.30 மணிக்கு கடைசியாக கிளம்பும் வடபழனி பஸ்ஸும் கிளம்பத் தயாராகிறது, 'இதைவிட்டால் வேறு வழியில்லை' என்று துயரத்தோடு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற....


என்னிடம் இருந்த 3 ரூபாயை கண்டக்டரிடம் நீட்டினேன்

'ஒரு வடபழனி' மெல்லிய குரலில் சொன்னேன்.

'வடபழனி அஞ்சு ரூபாம்மா.'

'எங்கிட்ட வேற காசு இல்ல சார். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன். அவுங்க எல்லோரும் வெளியூர் போயிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல...'

கண்டக்டரின் முகத்தைப் பார்க்கக் கூடத் திராணியில்லாமல், அழுகிற குரலில் சொன்னேன். அவர் என்ன நினைத்தாரோ, சட்டென்று டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துவிட்டார். வேறு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

'என்னை அந்தோணியார் கோயிலுக்கு அருகே பார்த்தபோதே, என் உடம்பு வேண்டும் என்று இவன் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்' என்று தான் ஏமாற்றப் பட்டதை மனக் குமுறலொடு நம்மிடம் கொட்டுகிறார்.

'ஆண்களின் உலகம் விசித்திரமான உலகமாக இருக்கிறது. யார் நல்லவன், எவன் கெட்டவன் என்று கண்டுகொள்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒருவன் அழைத்துவந்து ஏமாற்றுகிறான், ஒருவன் என் துயரம் சூழ்ந்த முகம் பார்த்து உதவி செய்கிறான்'

இப்படி ஆங்காங்கே கலைவாணியின் அனுபவ நடை; நடைமுறை வாழ்க்கையின் பொய் முகத்தை நம் முன் படம் போட்டு காட்டுகிறது.

இந்த பெண்கள் எங்கேதான் பாதைமாறுகிறார்கள்?

பாலியல் தொழில் செய்யும் பெரும்பாண்மையான பெண்கள், 'காதல்' என்ற சாலையில் பயணம் செய்யும் போதுதான் வழி தவறிவிடுகிறார்கள். அந்த பயணம் அவர்கள் வாழ்வையே சீரழித்துவிடுகிறது. சில சமையங்களில் வாழ்வின் இக்கட்டான சுழ்நிலைகளில் அவர்கள் எடுக்கும் முடிவும் (தவறான) அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடுகிறது. அந்த கிணறு முழுவதும் வக்கிர புத்திக் கொண்ட, பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்?.
*********** ******************* **********

பக்கம் 168
விலை : ரூ 80/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

வியாழன், பிப்ரவரி 18, 2010

ரூபாய் நோட்டில் கொக்கரிக்கும் ராஜபக்சே!

தமிழர்களின் தாய் நிலத்தைப் பறித்து, உறவுகளை கொன்றொழித்து, குருதி கொப்பளிக்க கொடுங்கோல் ஆட்சி செய்யும் ராஜபக்சே, தனது உருவப் படத்தை இலங்கை ரூபாய் நோட்டில் வெளியீட்டுள்ளான்.

புலிகளுக்கெதிரான முப்பது வருடங்களுக்கு மேலானப் போரில் தற்போதுதான் சிங்கள ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அதுவும்
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் நடைப்பெற்ற போர் என்பதால், சிங்கள ராணுவத்திற்கு இந்த தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது. அந்த வெற்றியை கொண்டாட ராஜபக்சேவின் படத்தை 1000 ரூபாய் நோட்டில் வெளியிட்டுள்ளது 'இலங்கை மத்திய வங்கி'.





புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த தற்காலிக வெற்றியை கொண்டாடும் ராஜபக்சே.


முன் பக்கத்தில் இரு கைகளையும் உயர்த்தியப் படி ராஜபக்சே, அருகில் இலங்கையின் ஒருங்கிணைந்த வரைபடம், அதில் நடுவில் ஒரு கலசமும் நெற்கதிரும் உள்ளன.

ரூபாய் நோட்டின் அடுத்தப் பக்கத்தில் சிங்கள கொடியை ஏந்தியப் படி ராணுவ வீரர்கள், பின்னணியில் கப்பல் மற்றும் விமானப் படைகளின் அணிவகுப்பு என்று ராஜபக்சேவின் விளம்பர சுவரொட்டியைப் போன்று உள்ளது 1000 ரூபாய் நோட்டு.

தமிழர்களுக்கெதிராக நடைப் பெற்ற போரை முன்னின்று நடத்திய இருவரில் ஒருவன் (பொன்சேகா) சிறையில் உள்ளான். இன்னோருவன் (ராஜபக்சே) வெளியில் உள்ளான். இருவருக்குமே இயற்கை மரணம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

எந்த ஒரு விடுதலைப் போரும் இறுதி வெற்றி வரும் வரை போராட்டத்தை நிறுத்தியதில்லை. உலகில் நடைப்பெற்ற பெரும்பாலான விடுதலைப் போராட்டங்களுக்கு தமதமாகத்தான் நீதி கிடைத்துள்ளது. தமிழன விடுதலைப் போரும் அப்படித்தான். இந்த தோல்வியும் தற்காலிகமானதுதான்.

உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சுதந்திரமான 'தமிழ் ஈழம்' பிறக்கும் என்பது உறுதி. அதுவரை தமிழ் ஈழ சுந்திரப் போராட்டம் 'நீறுபூத்த நெறுப்பாய்' கணன்றுக் கொண்டு இருக்கட்டும்'

வெற்றி நமதே...

ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

இந்திரா காந்தி கொலையாளிகளுக்கு 'தியாகிகள்' பட்டம்.

இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய கொலையாளிகள் நியூசிலாந்து நாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.


1984 ல் பொற்கோவிலில் நுழைந்த இந்தியப் படை 'ஆப்பரேஷன் புளு ஸ்டார்' என்ற பெயரில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்தியதால், சினம் கொண்ட சீக்கிய அமைப்புகள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.

இந்திய முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களாக இருந்த பீந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்களை மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கொலை சதியில் ஈடுபட்ட பாதுகாவலர் சேகர் சிங் மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவரும் விசாரனைக்குப் பிறகு தூக்கில் போடப்பட்டார்.

இந்த 3 பேரையும் நியூசிலாந்து நாட்டில் மனுகாவ் என்ற இடத்தில் வசிக்கும் சீக்கியர்கள் இந்திராவை கொன்றவர்களை தியாகிகளாக சித்தரித்து கொளரவித்தனர். அங்கு உள்ள சீக்கியர் கோவிலில் அவர்கள் உருவப்படங்கள் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன.

இந்த சம்பவம் அங்கு உள்ள மற்ற இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆக்லாந்தில் உள்ள சீக்கியர் கோவில் நிர்வாகிகள், இந்திராவை கொன்றவர்கள் மதத்துக்காக தங்கள் இன்னுயிரை விட்டுள்ளனர். அவர்களை தியாகிகளாக நினவு கூர்ந்து உள்ளோம் என்று விளக்கம் அளித்தனர்.

இலங்கையில் இந்திய அமைதிப் படை, தமிழனை கொன்று தமிழச்சியை கர்ப்பழித்து ஆடிய ருத்ரதாண்டவம் நாம் அறியாததல்ல. இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையில் மருந்துக்குக் கூட தமிழன் இல்லை. அதுதான் உண்மையும் கூட... அப்படி ஒரு தமிழன அழிப்புப் போரை இலங்கையில் நடத்தியது இந்திய அமைதிப் படை. அதன் மறு வினைதான் 'ராஜீவ் காந்தி படுகொலை'.

இந்திராவை கொன்றவர்கள் தியாகிகள் என்றால், ராஜீவை கொன்றவர்களும் தியாகிகள்தானே?


ராஜீவ் கொலை தொடர்பான நூல்:

ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது யார்?
-இ.அன்னபாண்டியன்
தமிழம்மா பதிப்பகம்
59, வினாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை -106

வெள்ளி, பிப்ரவரி 05, 2010

கடிதங்களின் பிணங்கள்!



  • கடிதங்களின் பிணங்கள் !

    மிக நீண்டதொரு
    இரவு

    அதன்
    வெளிச்சங்கள்
    இருட்டினுல் அமிழ்ந்து
    அழுகையை வெளியிட்டன...

    இரவின் யாருமற்ற
    தெருவெளியில்
    குப்பைத் தொட்டிக்கருகில்
    அழுகிய பிணங்களாய்
    கடிதங்கள் இறைந்து கிடக்கின்றன.

    தனிமையின்
    இருக்கத்தின்...
    சுவர்களெங்கும்
    இரத்தச் சிதறல்கள்
    எழுத்துகளாய்
    சிதறியிருக்கின்றன

    காடா விளக்கின்
    வெளிச்சத்தில்-இம்முறை
    அவன் வெளியே
    நின்றிருந்தான்

    அவன்
    வருவதற்குள்...

    கைமணிக்கட்டின்
    வழிவந்த குருதி...

    இம்முறை
    அவன் கால்களை
    நனைக்கும்,

    காற்றின் அலைதலில்
    பிணவாடை
    இன்று அதிகம்தான்.

    -தோழன் மபா

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

'பாட்சுலர் பாரடைஸில்' இனி நீங்கள் அரை டிராயரோடு சுற்ற முடியாது?


தெருவுக்கு தெரு மேன்ஷன், திரும்பிய பக்கமெல்லாம் மெஸ்ஸுகள், அரை ட்ராயரோடு இரவு முழுவதும் அலையும் இளைஞர்கள் என்று எப்போதும் திருவிழா முகம் காட்டும் திருவல்லிகேணியும் அதன் சார்பு பகுதியான அண்ணாசாலையும் தனது தனித்தண்மையை இழக்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையும் (அண்ணாசிலை)திருவல்லிக்கேணியும்,சென்னைக்கு வேலை தேடி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நுழைவு வாயில் என்றால் அது மிகையாகாது.

ஆம்! இளைஞர்களின் கனவு பிரதேசத்தை கலைக்க வருகிறது ஒமந்தூரார் தோட்டத்தில் அமையவுள்ள புதிய 'தமிழக சட்டமன்றக் கட்டிடம்'.

புதிய சட்டமன்ற கட்டிடத்தின் மாதிரி தோற்றம்.



இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து சென்னையில் காலுன்றி இருக்கும் லட்சக் கணக்கான தமிழர்கள் திருவல்லிக்'கேணி'யை தாண்டாமல் வந்திருக்க முடியாது.

குறுகலான திரிவல்லிகேணி தெரு...

எல்லிஸ் ரோடு, மவுண்ட் ரோடில் உள்ள அண்ணா,தேவி, சாந்தி தியேட்டர் வளாகங்கள் கெயிட்டி - காசினோ தியேட்டர் உள்ள பிளாக்கர்ஸ் ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை என்று சின்னதும் பெரிதுமாய் உணவு விடுதிகள்,மதுபான விடுதிகள் என்று இளைஞர்களின் உல்லாசபுரியாக (?) திகழ்கிறது திருவல்லிகேணியும், அண்ணாசாலையும். ('ஙே'.... னு முழிக்காதிங்க. அந்த.... உல்லாசபுரி இல்லை! (சற்றே ராஜேந்திரகுமார் நடை!!)


அண்ணா சாலையில் அண்ணா சிலை சந்திப்பு...

சேப்பாக்காம் கிரிக்கேட் ஸ்டேடியம் பக்கத்தில் நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் நாயர் மெஸ், அக்பர் சாஹிப் சாலையில் "வாங்க சார்... யொல்லோ டோக்கன்..." என்று நம்மை கியூவில் நிற்கவைத்து நல்லதொரு (வாய்ப்புக் கிடைத்தால் சாப்பிட்டு பாருங்க) சாப்பாடு போடும் 'காசி விநாயகா மெஸ்' திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நம்மை சாம்பார் இட்லியில் குளிப்பாட்டும் 'ரத்னா கேப்', இரவு நேரத்தில் எல்லிஸ் ரோட்டோரத்தில் இருக்கும் இட்லி கடை அப்புறம் இருக்கவே இருக்கு மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற புகாரி, சங்கம் ஹோட்டல்கள் என்று மெட்ராஸின் தனித்தன்மையான அடையாளங்கள் எல்லாம் இனி என்ன ஆகும் என்று தெரியவில்லை?



இன்னிலையில் தமிழ அரசு கட்டிவரும் புதிய தலைமைசெயலகத்தால் அந்த பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் இப்போதே கலக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு புதிய சட்டமன்றக் கட்டிடத்தை ஒமந்தூரார் தோட்டத்தில் 1லட்சத்தி 60 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாய் கட்டிவருகிறது . ஜெர்மனியை சேர்ந்த ஜி.எம்.பி என்ற சர்வதேச கட்டுமாண நிறுவனத்தினர் கடந்த ஆறு மாதமாய் மகா சுறு சுறுப்புடன் கட்டி வருகிறார்கள். வரும் மார்ச் 13-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். அதற்குள்ளாகவே இந்த பகுதி காவல் துறையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

'ஊரிலிருந்து உங்க மாமாவோ, சித்தப்பாவோ வேலை விஷயமா மெட்ராஸ் போறேன்னுட்டு வெள்ளைச் சட்டையப் போட்டுக்கிட்டு பஸ் ஏர்னார்னா நேரா இங்குவந்துதான் ரூம் போடுவார்'. இனி அதெல்லாம் முடியாது. "இங்கு 'ஃபுளோட்டிங் பாப்புலேஷன்' அதிகம். முன்புபோல் சுதந்திரமாக வந்து இங்கு யாரும் தங்கமுடியாது... " என்கின்றனர் லாட்ஜ் உரிமையாளர்கள்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சின்னமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இக் கோட்டை வருகிறது. இது நாள்வரையில் இங்கு வாடகை குடுத்துக் கொண்டு, இயங்கி வந்த தமிழக அரசு, இனி சொந்த கட்டிடத்தில் இயங்கப்போகிறது.

புதிதாய் அமையவிருக்கும் தலைமை செயலகத்தைச் சுற்றி, நிறைய வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் குடியிருப்புகளும் உள்ளன. இனி அந்த குடியிருப்பு வாசிகளுக்கும் பிரச்சனைதான். அதோடு பலரும் இப் பகுதியில் புதிதாய் இடமோ, கட்டிடமோ வாங்க தயங்குகிறார்கள். சட்டமன்றக் கட்டிடம் இங்கு வருவதே அதற்கு காரணம்.

வீட்டை விட்டு சென்னையில் தங்கி வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இங்குதான் குறைந்த வாடகையில் ரூம்கள் கிடைக்கின்றன. இருவர் - மூவராய் சேர்ந்து அறையை பகிர்ந்துக் கொள்வதால் இங்கு மாதவாடகை மிக குறைவாகவே இருக்கும்.

பாதுகாப்பு என்ற போர்வையில் காவல் துறையினர் இவர்களது சுதந்திரத்தில் கைவைப்பார்கள். இங்கு உள்ள மேன்ஷன் மற்றும் லாட்ஜுகளில் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள், புதியதாக யார் வருகிறார்கள் என்று, D1 காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும். அதோடு இப்பகுதியில் புதியதாக லாட்ஜூகளோ மேன்ஷனோ (எந்த ஒரு கட்டிடமும்) கட்டக்கூடாது, என்று அடுக்கடுக்காய் பாதுகாப்பு என்ற போர்வையில் கிடிக்கிப்பிடி போட்டு வருகிறது தமிழக அரசு.

இரவு 8 மணிக்கு மேல் யாரும் நடமாடக் கூடாது, சட்டசபை நடைபெறும் காலங்களில் இந்த பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளிலும், உள் வட்டச் சாலைகளிலும் நடமாடத் தடை என்று காவல் துறையினரின் பிடி இருக இருக... 'பாட்சுலர் பாரடைஸிலிருந்து' இளைஞர்பட்டாளம் பறந்து போகும்.

அப்போது 'டிரிப்லிக்கேண்' வீதிகளில் அந்த இளைஞர்கள் விட்டுச் சென்ற கனவுகளும், சிரிப்பொலியும்,சுதந்திரமும் வீதியெங்கும் கேட்பாரற்று இறைந்து கிடக்கும்!.













வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...